செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி

என்ன பூமியில் வாழ்ந்து போரடிக்கிறதா? செவ்வாய் கிரகத்திற்கு வர்றேங்களா என்று உங்கள் பயண முகவர் கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. என்ன கதை உடுறான் என்று நெனைக்கதீங்கோ.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை விரிவாக ஆராய அமெரிக்காவின் நாசா, பீனிக்ஸ் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.பீனிக்ஸ் விண்கலம் அங்கு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. மே 25ம் தேதி பீனிக்ஸ் தரையிறங்கியபோது அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் தென்பட்டது. அது உப்பு அல்லது ஐஸ் கட்டியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதையடுத்து மேலும் 3 இடங்களில் பீனிக்ஸ் விண்கலம், மண்ணைத் தோண்டியபோது அங்கும் வெள்ளை நிறத்திலான பொருள் தென்பட்டது. தோண்டிய சிறிது நேரத்தில் இது சூரிய வெப்பத்தில் ஆவியாகி விட்டது. எனவே இது உப்போ அல்லது பாறையோ இல்லை, மாறாக ஐஸ் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மிக முக்கியஆதாரம் இது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதை வைத்து மட்டும் செவ்வாய் கிரகம், மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் என்று கூறி விட முடியாது. உணவுப் பொருள் இல்லாத கிரகம், வாழத் தகுதியற்ற கிரகம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கருத்து. தொடர்ந்து ஆய்வு நடத்தி, செவ்வாய் கிரகத்தில் வேறு ஏதாவது கனிப் பொருட்கள் மறைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்யவுள்ளனர்.

செவ்வாயில் ஐஸ் கட்டிகள் இருப்பது தெரியவந்திருப்பதால், செவ்வாய் கிரக ஆய்வுகள் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

0 நண்பர்கள் பூசை செய்றாங்கோ: